வழக்கத்திற்கு மாறாக, இந்தாண்டு தமிழகத்தில் கடும் பனியும் குளிரும் வாட்டிக் கொண்டிருந்தது. பனிக்காலமும் கூட சிறிது நாள் நீடித்திருந்தது. அப்போதே, இதே போல், கோடைக்காலத்தில் வெயிலும் வாட்டி வதைக்கும் என்று மக்கள் அஞ்சி நடுங்கி கொண்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் வெயில் வாட்டி வதைக்கும் எனவும் குறிப்பாக வட மாவட்டங்களில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
மார்ச் முதல் மே மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால், தமிழகத்தின் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்.
வரும் 4ம் தேதி (புதன்கிழமை) தென் தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தமிழ்நாட்டின் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று குறிப்பிட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், சென்னை உட்பட தமிழக கடலோர பகுதிகளிலும் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


