தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களின் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியும் அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியும் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளன.
திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு காங்கிரஸ், மதிமுக, ஐயூஎம்எல், மமக, மஜக, தவாக, கொ.ம.தே.க, எஸ்.டி.பி.ஐ., கொ.இ.பே. உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இன்று விசிக மற்றும் மநீம கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதில் சுமூக முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரம், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கு பாஜக பெரும்பாலான கோயில் நகரங்களில் போட்டியிட விரும்புவதும், கூடுதல் தொகுதிகளை அதிலும் குறிப்பாக அதிமுக போட்டியிட விரும்பும் தொகுதிகளில் சிலவற்றை எதிர்பார்ப்பதுமே காரணம் எனக் கூறப்படுகிறது.
கடந்த முறை தமிழ்நாடு வருகை தந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் இழுபறி நீடித்த நிலையில் அவர் டெல்லி திரும்பினார்.
இந்நிலையில், மதுரையில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த என்டிஏ கூட்டணி மாநாட்டிற்கு பிறகு பியூஷ் கோயலுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக இபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். பியூஷ் கோயலுடன் தொடர்ந்து 2 முறை கலந்து பேசியும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதன் போது, சென்னையில் உள்ள முக்கிய தொகுதிகளையும் கேட்டு பாஜக வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் அமித் ஷாவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று தெரிகிறது.


