ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப்படைகள் கடந்த சனிக்கிழமை தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் உச்ச தலைவர் காமெனி, அவரது குடும்பத்தினர் மற்றும் அந்நாட்டின் முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் ராணுவ நிலைகள் மற்றும் அதன் நட்பு நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம், வளைகுடா நாடுகளின் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு நிலைமை மோசமாகி வருகிறது.
இதன் காரணமாக கடந்த மூன்று நாட்களாக மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் பதற்றம் உருவாகியுள்ளது. இது இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று காலை நேரடியாக எதிரொலித்ததால், இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன.
மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் இன்று காலை கடுமையான சரிவுடன் வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் சரிந்து, 80,285 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து, 24,870 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல, போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் 12% வரை உயர்ந்துள்ளது. இதேநிலை நீடித்தால், இந்தியாவில் ஏற்கனவே அதிக விலையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயரும் ஆபத்து உள்ளது.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் 24 காசுகள் சரிந்து ரூ.91.32 என்ற மிக மோசமான நிலையில் இருக்கிறது.
இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சியடைந்திருப்பது வாடிக்கையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி கவலையில் ஆழ்த்தியுள்ளது.


