பிரதமர் மோடி கடந்த பிப்.26ம் தேதி இஸ்ரேல் நாட்டிற்கு 2 நாள் அரசுமுறை பயணமாக சென்றிருந்தார். பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்ப வந்தவரை, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது மனைவி சாரா ஆகியோர் பென் குரியன் விமான நிலையத்தில் நேரில் வழியனுப்பினர்.
அப்போது பிரதமர் மோடி-நெதன்யாகு ஏறக்குறைய 15 நொடிகள் ஒருவரையொருவர் கட்டிப்பிடித்து தங்களது நட்பை வெளிப்படுத்தினர். இந்த பிரிவு உபசார கட்டிப்பிடிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி உள்ளது.
இந்த சந்திப்பு முடிந்த 48 மணி நேரத்திற்குள், ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா கூட்டுப்படைகள் தாக்குதலைத் தொடங்கின.
மேலும், நாடாளுமன்றத்தில் உரையாற்றிய நெதன்யாகு, இந்த நிகழ்வை மோடி கட்டிப்பிடிப்பு என்று குறிப்பிட்டதுடன், இது நடிப்பு கிடையாது, இருவருக்குமான உண்மையான நட்பின் அடையாளம் என்றும் கூறியிருந்தார்.
இதனால், பிரதமர் மோடியுடனான 15 நொடிகள் கட்டிப்பிடிப்பின் போது, ஈரான் மீதான தாக்குதல் திட்டமிடல் குறித்து நெதன்யாகு ரகசியமாக மோடியிடம் கூறியிருக்கலாம் என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த 2016ம் ஆண்டு இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி அங்கு தாளம் இசைத்து, நடனமாடியதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு உதவியதாக எப்ஸ்டீன் அவரது இ-மெயிலில் குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டி, இந்த முறை அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தும் முன்பு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்று அமெரிக்காவுக்கு உதவி இருப்பாரோ என்ற கோணத்திலும் நெட்டிசன்கள் விவாதிக்கின்றனர்.
ஏனெனில், இஸ்ரேல் செல்லும் முன்பு, இந்திய பொருட்கள் மீதான வரி விதிப்பு, அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரதமர் மோடி அதிபர் டிரம்புடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வந்தார். அப்போது டிரம்ப் வலியுறுத்தியதைத் தொடர்ந்தே அவர் இஸ்ரேல் சென்றிருக்கக் கூடும் என்றும் நெட்டிசன்கள் பேசுபொருளாக்கி வருகின்றனர்.
தாக்குதல் நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி இஸ்ரேல் சென்றதை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். நடக்கவிருக்கும் போர் குறித்து முன்னரே அறிந்திருந்தும், பிரதமர் மோடி இஸ்ரேலுக்கு சென்று ஒற்றுமையை வெளிப்படுத்தியது தார்மீகக் கோழைத்தனம் என்று அவர் சாடியுள்ளார்.
இந்நிலையில், இஸ்ரேல், இந்திய அரசு தரப்பிலிருந்தும் ரகசியத் தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, தாக்குதலைத் தொடர்ந்து அனைத்து தரப்பினரும் அதிகபட்ச நிதானத்தை கடைபிடிக்கும்படி இந்திய வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்துள்ளது.


