அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதைக் கண்டித்து காஷ்மீரில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதலாவது நாளாக போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், 2வது நாளாக நேற்றும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன. ஷியா பிரிவினர் வசிக்கும் பெமினா, குந்த் ஹாசிபாத், ஜஹாங்கீர் சவுக் பகுதிகளிலும், தெற்கு காஷ்மீரின் புல்வாமாவிலும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, காஷ்மீரில் போராட்டங்கள் பரவாமல் தடுக்க முக்கிய பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணைய வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஸ்ரீநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்கள் கூடுவதை தடுக்க காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முதாஹிதா மஜ்லிஸ் இ உலாமா சார்பில் அதன் தலைவர் மிர்வாய்ஸ் உமர் பரூக் ஒருநாள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததன் காரணமாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலைத் தொடர்ந்து வன்முறையை ஏற்படுத்தக்கூடிய தீவிரவாத பிரசாரங்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் கடந்த 28ம் தேதி அனுப்பிய கடிதத்தில், தீவிரவாதிகள் மற்றும் சர்வதேச தீவிரவாத குழுக்களின் சமூக ஊடக நடவடிக்கைள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் கவனமாக இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தூதரகங்கள், துணை தூதரகங்கள் மற்றும் இரு நாடுகளின் நிறுவனங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறும் வலியுறுத்தி உள்ளது.


