தமிழ் திரையுலகில் ஆரம்பத்தில் பத்தோடு பதினொன்றாக பார்க்கப்பட்ட இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இன்று கோலிவுட்டின் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக மாறியுள்ளார் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதற்கு அவரது கடின உழைப்பும், புதிதாக முயற்சிக்க வேண்டும் என்ற வெறியுமே காரணமாகும்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கும் இவரே இசை அமைக்கவுள்ளார்.
அனிருத் சமீபத்தில் அளித்த பேட்டியில் பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைப்பதில் உள்ள அழுத்தம் குறித்த கேள்விக்கு, எப்போதும் அழுத்தத்தை எடுத்துக் கொள்ள மாட்டோம். இசை அமைக்க தொடங்கி 15 ஆண்டுகளாகின்றன. ஒரு பாடலை உருவாக்கும் ப்ராசசை ரசிக்கிறோம். ஏதாவது ஒன்றை புதிதாக முயற்சித்து கொண்டே இருப்போம். அதனை கேட்கும் ஆடியன்ஸுக்கும் பிடித்துவிடுகிறது.
ரஜினி-கமல் இருவரும் இணைந்து நடிக்கிறார்களே என்ற வகையில் மனதுக்குள் அழுத்தம் இருக்கலாம். ஆனால், ஜாலியாக ரெட்ரோ வைப்பில் ஒன்றை முயற்சித்தோம் என்று தெரிவித்தார்.
ஏன் ஹீரோவாக நடிக்கவில்லை என்ற மற்றொரு கேள்விக்கு பதிலளித்து பேசிய அனிருத், என்னுடைய ஆர்வம் இசைதான். நான் உறுதியாக நம்புவது என்னவென்றால், இந்த 15 ஆண்டுகளில் ஆடியன்ஸ் எனக்கு இந்தளவு பெரிய இடத்தைக் கொடுத்திருக்கிறார்கள். தமிழில் மட்டுமல்லாது, பல மொழிகளில், இசை கச்சேரிகளுக்கு செல்லும்போது உலகளவிலும் கிடைக்கும் அன்பு, ஈடு இணையற்றது.
நம்மை அவர்கள் நேசிக்கக் காரணம், நம்முடைய இசை. எனவே அந்த இசையைவிடாமல் இன்னும் பெரிய ஓட்டம் ஓட வேண்டும். இது தவிர, படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று என்னால் பொறுமையாக நடிக்க முடியுமா எனத் தெரியவில்லை. எனக்கு பிடித்த இசையில் இன்னும் சிறப்பாக என்ன செய்யலாம் என்பதுதான் என்னுடைய சிந்தனை எனக் கூறினார்.
மேலும் அவர், சமீபத்தில் ரிலீஸ் ஆனா `ஆயா ஷேர்’ பாடலுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது அனைவரின் கூட்டு உழைப்புதான் எனவும் பாடல், பாடல் வரி, பாடகர் பாடிய விதம், நானியுடைய நடனம் இப்படி எல்லாம் சேர்ந்து தான் ப்ளாஸ்ட் ஆனது என்றும் குறிப்பிட்டார்.


