மத சார்பற்ற கூட்டணியில் நீடித்து வரும் திமுக-காங். இடையேயான முரண்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கையை காங். தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் இந்த சிக்கல் நீடிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக கூட்டணியில் பயணிக்கும் காங். தற்போது வரை இந்த கூட்டணியில் இருந்து வருகிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க முன்வராத போது, திமுக தலைவர் ஸ்டாலின் ராகுலை பிரதமர் வேட்பாளராக பகிரங்கமாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, இவர்கள் இருவரிடையேயான உறவு அதிகரித்து, ஸ்டாலின் தனது மூத்த தலைவர் என்று ராகுல் காந்தியும் இருவரின் பிறந்தநாளுக்கும் ஒருவரையொருவர் சகோதரர் என்று குறிப்பிட்டு வாழ்த்து சொல்வதும் வழக்கமானது.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்த ராகுல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல ஆரோக்கியம், வலிமை மற்றும் நீண்ட ஆயுளுடன் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.
ராகுல் வழக்கமாக பயன்படுத்தும் அண்ணன் (சகோதரர்) என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. இந்த வார்த்தை தவிர்க்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது.
இதற்கு பதிலளித்த ஸ்டாலினும் ராகுல் பாணியிலேயே சகோதரர் வார்த்தையை தவிர்த்து பதிவிட்டிருப்பது இவர்களிடையே விரிசல் முற்றிருப்பதையே காட்டுகிறது.
கடந்த ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தின்போது, எனது சகோதரரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ராகுல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தொகுதி பங்கீடு, ஆட்சியில் பங்கு என்ற காங்கிரஸ் கோரிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே, சகோதரர் என்ற வார்த்தையை ராகுல்காந்தி குறிப்பிடவில்லை என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர். இது அரசியல் களத்தில் தற்போது பேசுபொருளாகி உள்ளது.


