ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியதால் மேற்கு ஆசியாவில் போர் பதற்றம் நிலவுகிறது.
உலக கச்சா எண்ணெய் சந்தை விநியோகத்தில் ஈரான் முக்கியத்துவம் பெற்ற நாடாக விளங்குகிறது. அதே போல், மற்றொரு எண்ணெய் வளம் மிகுந்த நாடான வெனிசுலாவை கைப்பற்ற துடித்த டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுரோவை கைது செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்தி விட்டு அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க டிரம்ப் வலியுறுத்தினார். முதலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அரசுக்கு செக் வைக்கும் வகையில் இந்திய பொருட்கள் மீதான வரியை உயர்த்தி மிரட்டிய டிரம்ப், இந்தியாவை அவரது விருப்பத்திற்கு அடிபணியச் செய்தார்.
இதையடுத்து, இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய பொருட்கள் மீதான வரி 18% ஆக குறைக்கப்பட்டாலும் அமெரிக்க பொருட்களுக்கு முழு வரி விலக்கு அளிக்கும் நிலைக்கு பிரதமர் மோடி தள்ளப்பட்டார் என்பதே நிதர்சனமான உண்மை.
இந்நிலையில், தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, ஈரான்-ஓமனுக்கு இடையே அமைந்துள்ள உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் அரசு மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவின் தேவையில் 83% எரிவாயு, 30% கச்சா எண்ணெய் ஹோர்மூஸ் நீரிணை வழியாகத்தான் வருகிறது. இந்தியாவின் தேவையில் 30% ஹோர்மூஸ் நீரிணை வழியாக வருகிறது.
தற்போது, இந்த நீரிணை மூடப்பட்டுள்ளதால் கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளது. உலக கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 20% மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்என்ஜி) ஆகியவை இந்த வழித்தடம் வழியாகவே செல்கின்றன.
இது ஆசிய நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இது ஈரான் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் செல்லும் முக்கிய வழித்தடமாகவும் உள்ளது.
தினமும் சுமார் 15 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் இந்த வழித்தடத்தின் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இந்த நீரிணை மூடப்பட்டுள்ளதால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு அதன் விலை கடுமையாக உயரக்கூடும். இது உலகச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியா அதன் எண்ணெய் இறக்குமதியில் பெரும் பகுதியை சுமார் 2.5 முதல் 2.7 மில்லியன் பேரல்கள் வரை இந்த வழித்தடத்தின் வழியாகவே பெறுகிறது. பதற்றமான கால கட்டங்களில் போக்குவரத்து இயக்கத்தை கட்டுப்படுத்தும் முக்கிய தடை புள்ளியாக செயல்படுகிறது.


