தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகித்து வருகிறது. தொடக்கம் முதலே கூட்டணி மாறி பயணித்ததால் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் விசிக வெற்றி பெறவில்லை.
கடந்த 2019ல் திமுகவுடன் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து கைகோர்த்த பின்னரே விசிக தொடர் வெற்றி கண்டு வருகிறது.
இந்நிலையில், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி கோரிக்கையை திமுக தலைமையிலான காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையிலும், விசிக அதன் நிலைபாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இருப்பினும், கூடுதல் தொகுதி கேட்போம் என்று மட்டுமே கூறி வந்தது.
இதனிடையே, டிஆர் பாலு தலைமையிலான திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக் குழு கடந்த 23ம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கி நடத்தி வருகிறது.
கடந்த சனிக்கிழமை மட்டும் காங்கிரஸ், மமக, தவாக, ஐயூஎம்எல், மதிமுக உள்பட 9 கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத் தொடர்ந்து, விசிக மற்றும் மநீம ஆகிய கட்சிகளுடன் திமுக தரப்பு இன்று பேச்சுவார்த்தை நடத்தும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், திமுக – விசிக தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது. இதற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், புதுச்சேரியில் 1 பொதுத்தொகுதி, 2 தனித் தொகுதிகள் என 3 தொகுதிகள் கேட்டுள்ளோம். திமுகவிடம் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றார்.
மேலும், மோடியின் தலைமையில் நேற்று மதுரையில் நடந்த என்டிஏ கூட்டணி மாநாடு குறித்த கேள்விக்கு, பிரதமர் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அவரது அரசியல் இங்கு எடுபடாது, என்று பதிலளித்தார்.


