இந்தாண்டு தொடக்கத்தில் தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வந்த தங்கம் விலை கடந்த மாதத்தில் ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.
கடந்த சனிக்கிழமை (பிப்.28) தங்கம் விலை சவரனுக்கு காலையில் ரூ.2,400ம், மாலையில் ரூ.2,800ம் உயர்ந்து சவரன் ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனையானது. அதே போன்று வெள்ளியும் காலை, மாலை என ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.25 ஆயிரம் உயர்ந்தது.
இதைத் தொடர்ந்து, பங்கு சந்தைகளுக்கு விடுமுறை நாளாக இருந்தும், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் நிலவும் போர் பதற்றத்தால், மார்ச் 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தங்கம் விலை கிராமுக்கு ரூ.225 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15,775க்கும், சவரனுக்கு ரூ.1,800 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனையானது.
இதன்படி, பிப்.28 மற்றும் மார்ச் 1ம் தேதி என 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,000 அதிகரித்தது.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இந்த மாதத்தில் வாரத்தின் தொடக்க நாளான மார்ச் 2ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து, ஒரு சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 280 ரூபாய்க்கு விற்பனையானது.
அதே போல், வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து பார் வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று (மார்ச் 3) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலையில் சவரனுக்கு ரூ.80ம், மாலையில் மேலும் ரூ.1,480 என மொத்தம் ரூ.1,560 குறைந்தது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.315க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.265 குறைந்து ரூ.15,200க்கும், சவரனுக்கு ரூ.2,120 குறைந்து சவரன் ஒரு லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
அதே போல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.295க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, மார்ச் 2ம் தேதி ரூ.920, மார்ச் 3ம் தேதி ரூ.1,560, இன்று (மார்ச் 4) ரூ. 2,120 என கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,600 வீழ்ச்சி அடைந்துள்ளது.


