தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் திமுக ஆட்சியை தக்கவைத்து கொள்ளவும் எதிரணியில் உள்ள அதிமுக ஆட்சியை பிடிக்கவும் போட்டி போட்டு கொண்டிருக்கின்றன. இதில், தமிழக அரசியலில் முதல்முறையாக தேர்தலை சந்திக்கும், 3வது மாற்று சக்தியாக கருதப்படும் தவெகவும் களத்தில் உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், முதன்முறையாக தேர்தலை சந்திக்க தவெக முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஒருபுறம் அக்கட்சியின் தலைவர் விஜய் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து வருகிறார்.
மற்றொரு புறம், தேர்தல் அறிக்கை தயாரிப்பது தொடர்பாக தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தலைமையிலான குழு ஐந்து மண்டலங்களில் பொது மக்களின் கருத்துக்களை கேட்டறிந்துள்ளது. மேலும், இணையதளம் வாயிலாகவும் தவெக தரப்பில் பொது மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன.
இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தவெகவின் தேர்தல் அறிக்கையை வரும் 8ம் தேதி, சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிட அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


