தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறைக்கு செல்லும் முன் பன்னீர் செல்வத்திடம் இருந்து பறித்த முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமியை நம்பி கட்சியையும் ஆட்சி பொறுப்பையும் விட்டுச் சென்றார்.
அதன் பிறகு, ஓபிஎஸ் அதிமுக உரிமை மீட்பு குழுவை ஏற்படுத்தி கட்சியை மீட்க போராடி வந்தார். இதனிடையே, தன்னை நம்பிய சசிகலாவுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த இபிஎஸ் முதல்வர் பதவியையும் கட்சியையும் தனதாக்கிக் கொண்டார்.
இதனால் மனம் வெறுத்த டிடிவி தினகரன் இபிஎஸ்ஸை வசைபாடி வந்தார். அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியை விட்டும் வெளியேறினார். ஆனால் தற்போது பாஜகவின் மிரட்டலுக்கு பணிந்து அதிமுக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார்.
இதனால் விரக்தியின் உச்சத்திற்கே சென்ற சசிகலா தனது ஆதரவாளர்களை ஒன்று திரட்டி தீவிர அரசியலில் ஈடுபடும் நோக்கில் அவ்வபோது ஆலோசித்து வந்தார். அண்மையில் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்திருந்தார்.
அதன்படி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்.24ம் தேதி சசிகலா தனது கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
கட்சியின் கொடியை அறிமுகம் செய்ததில் இருந்தே, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் அவர் தொடர் ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மார்ச் 5ம் தேதிக்குள் கட்சியின் பெயரை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், தங்களது சொந்த இடங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் கட்சியின் கொடிக்கம்பங்களை உடனடியாக நட்டு கொடியை பறக்க விடுமாறு சசிகலா உத்தரவிட்டுள்ளார்.


