தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக தரப்பில் டி.ஆர். பாலு தலைமையிலான 7 பேர் குழு தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
அந்த வகையில், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் உள்ளிட்ட கோரிக்கைகள் காரணமாக இழுபறி நீடித்து வந்த சூழலில், திமுக – காங். கட்சிகளுக்கு இடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த சனிக்கிழமை (பிப்.28) நடைபெற்றது.
இதன்போது, காங். சார்பில் 39 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் 2 மாநிலங்களவை சீட் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
முன்னதாக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோது, 41 சட்டப்பேரவைத் தொகுதிகள் + 1 மாநிலங்களவை சீட் கேட்டு காங்கிரஸ் வலியுறுத்தி இருந்தது. இருப்பினும், தேமுதிக, மநீம உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணி வருகையை புரிந்து கொண்டு அந்த எண்ணிக்கையை குறைக்க காங். முன்வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, காங்கிரசுக்கு 25 + 1 தொகுதிகள் வழங்க திமுக தரப்பு தயாராக இருப்பதாகவும், இரு கட்சிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அறிவாலாய தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு காங்கிரஸ் குழு, கடந்த முறையும் கூட்டணி நலன் கருதித்தான், கட்சியினரை சமாதானப்படுத்தி 25 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டதாகத் தெரிவித்தது.
இதனிடையே, திமுகவுடன் நடத்தி வரும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தவெகவை புதிய கட்சி எனக் குறைத்து மதிப்பிட முடியாது. இளைஞர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது எனக் கூறியுள்ளார்.
இது திமுகவை சீண்டும் வகையில் அமைந்ததால், இனி கூட்டணியில் நீடிப்பதும் விலகுவதும் காங்கிரஸ் கட்சியின் கைகளில் தான் இருக்கிறது என்று திமுக மறைமுகமாக கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே, டெல்லி சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கோபண்ணா உள்ளிட்ட சிலர், கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் கிரிஷ் சோடங்கர் மீது புகார் அளித்தனர். இதனால் கோபமடைந்த கார்கே, கிரிஷ் சோடங்கரை தொலைபேசி வாயிலாக கடிந்து கொண்டதாகத் தெரிகிறது.
கிரிஷ் சோடங்கர் நடத்திய பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், முதல்வர் ஸ்டாலினுடன் இணக்கமான நட்பு கொண்டுள்ள மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை களமிறக்க சோனியாவும், கார்கேவும் முடிவெடுத்து அவருடன் வீடியோ காலில் பேசியுதாகவும் கூறப்படுகிறது.
அப்போது தான் மட்டும் தனியாக சென்று முதல்வரை சந்திப்பதாக கூறியதற்கு மேலிடம் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதல்வர் ஸ்டாலினை ப.சிதம்பரம் சந்தித்தார்.
முன்னதாக, ப.சிதம்பரத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து இருவரும், முதல்வர் இல்லத்திற்கு சென்றனர். ஏறக்குறைய ஒரு மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் போது திமுக எம்.பி.கனிமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
இந்நிலையில், ப.சிதம்பரம் தலைமையில் திமுக-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது திமுக 27 தொகுதிகள் வரை தர விரும்பும் நிலையில், அதிகபட்சம் கூடுதலாக 28 தொகுதிகள் +1 ராஜ்யசபா சீட் என தொகுதி பங்கீடு இறுதியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு காங்கிரஸ் தரப்பு ஒப்புழக் கொள்ளும் பட்சத்தில் திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு இன்று இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


