தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் பழைய பெயர்ப் பலகைகளின் மையத்தில் ஆங்கிலம் பிரதானப்படுத்தி இருந்த நிலையில், தற்போது இந்தி இடம் பெற்று வருவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 4ம் தேதி சிவகாசி ரயில் நிலையத்தின் புதிய பெயர்ப் பலகையின் மத்தியில் இந்தி பிரதானப்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு எழும்பியது.
திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்பியுமான கனிமொழி, மாநில நிதியமைச்சரும், திமுக விருதுநகர் வடக்கு மாவட்டச் செயலாளருமான தங்கம் தென்னரசு, எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆகியோர் தமிழை அவமதித்ததாக தெற்கு ரயில்வேக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், ஏறக்குறைய ஒரு மாதம் கடந்த நிலையில், திருச்சி ரயில்வே நுழைவாயிலுக்கு கர்த்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் சூட்டியிருப்பதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கண்டனம் வலுத்து வருகிறது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்தித் திணிப்பு வெறியில் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது பாஜக. ‘மொழி ஒன்று – வரிவடிவம் மூன்று’ என்னும் வகையில் இந்திப் பெயரையே தமிழ், ஆங்கிலத்திலும் எழுதி வைக்கும் இழிவான இந்தி திணிப்பு செயலில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர் திருச்சி மண்டல ரயில்வே அலுவலக நுழைவு வாயிலில் ‘கர்தவ்ய த்வார்’ என எழுதி வைத்துள்ளனர்.
வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களில் (இபிஎஃப்ஓ) ஏற்கெனவே ‘பவிஷ்ய நிதி பவன்’ என்ற பெயரைத் திணித்து விட்டனர். குற்றவியல் சட்டங்களின் சமஸ்கிருத பெயரை ஆங்கில வரிவடிவத்தில் எழுதுகின்றனர். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகத்தின் பெயர் ‘ஜல் சக்தி’ ஆகிவிட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டப் பெயர் மாற்றத்திலும் இதே வேலையைத்தான் காட்டினார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும், இவர்களின் கொட்டமும், ஆணவமும் கூடிக்கொண்டே போகிறது. தமிழர்களின் சுயமரியாதையைச் சீண்டிப் பார்க்கும் இவர்களுக்குச் சரியான பாடம் புகட்ட வேண்டும். தமிழ், ஆங்கிலப் பெயர்களிலும் இந்தியைத் திணிக்கும் முயற்சியைக் கைவிட்டு, உடனடியாக அங்கு சரியான தமிழ் பெயர்கள் இடம்பெற வேண்டும்.
இல்லையென்றால் தமிழர்களின் சூட்டை ஒன்றிய பா.ஜ.க. அரசு உணர வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தமிழர்களின் சுயமரியாதையை சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என அவரது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், கர்தவ்ய த்வார் என இந்தியில் பெயர் சூட்டியிருப்பது புறவாசல் வழியாக இந்தியை திணிக்கும் மற்றொரு முயற்சியாகும். தமிழர்களின் மொழிப்பற்று, உணர்வுகளை புறக்கணித்து இந்தியில் பெயரிடுவது கடும் கண்டத்துக்குரியது. இந்தி திணிப்பை தவிர்த்து தமிழில் பெயரிட தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் இந்தியில் பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். இந்தி பெயரை நீக்கி உடனடியாக தமிழில் பெயர் சூட்டவும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில், சில அதிகாரிகள் செய்த தவறுகளுக்கு, மத்திய அரசு தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. தமிழ் மொழிபெயர்ப்பை முறையாக வைக்கவும், தமிழ் மொழி பலகையை முறையாக வைக்கவும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை வலியுறுத்தியுள்ளார்.


