ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த சனிக்கிழமை நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமெனி, அவரது குடும்பத்தினர் மற்றும் மூத்த ராணுவத் தலைவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல், அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளான வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தி வருகிறது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து, மத்திய கிழக்குப் பகுதிகளில் கடந்த சனிக்கிழமை முதல் முன்னெச்சரிக்கையாக வான் எல்லைகள் மூடப்பட்டன.
விமானப் போக்குவரத்து முடங்கியதால் துபாய், பஹ்ரைன், கத்தார், குவைத் உள்ளிட்ட நகரங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து தாயகம் திரும்ப முடியாமல் இந்தியர்கள் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, மத்திய அரசு மேற்கொண்ட முயற்சியால் ஏர்-இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனங்களின் சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் பத்திரமாக, பாதுகாப்பாக தாயகம் திரும்பி வருகின்றனர்.
இந்த விமானங்கள் தாக்குதல் நடக்காத நேரத்தில் சூழ்நிலையைப் பொறுத்து, தடை செய்யப்பட்ட வான்வெளியைத் தவிர்த்து மாற்று வழியில் இயக்கப்படுவதாகத் தெரிகிறது.
இதனிடையே, இந்தியா-மேற்கு ஆசியா இடையே வெளிநாட்டு விமானப் போக்குவரத்து சேவைகள் வான்வெளி கட்டுப்பாட்டு அடிப்படையில் குறைந்தளவில் இயக்கப்படுகின்றன.
விமான பயணச்சீட்டு கட்டணத்தை திரும்ப செலுத்துதல், நேரத்தை மாற்றி அமைத்தல், பயணியருக்கான உதவி குறித்து தெளிவாகவும் வெளிப்படையாகவும் வழங்கும்படியும் பயணியரின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லை என்றும் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தலைமையில் நடந்த உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 4 நாட்களில் துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 366 பேர் சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக சென்னை திரும்பி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


