தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் இரு முக்கிய கட்சிகளான ஆளும் திமுகவும் எதிரணியில் உள்ள அதிமுகவும் அவற்றின் தலைமையிலான கூட்டணியை ஓரளவுக்கு முடிவு செய்துள்ளன.
இருப்பினும், இன்னும் சில கட்சிகள் புதிதாக தங்களது கூட்டணியில் இணைய உள்ளதாக இரு தரப்பிலும் கூறப்பட்டு வருகிறது.
இதனிடையே, திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை குழு கூட்டணி கட்சிகளுடனான முதல் சுற்று பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது. அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக தலைமைக்கும் இபிஎஸ்ஸுக்கும் இடையே கருத்து மோதல் நிலவுவதால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது.
இதையடுத்து, அமித் ஷாவை சந்திக்க டெல்லி புறப்பட்டு சென்ற இபிஎஸ், சந்திப்புக்கு பிறகு தொகுதி பங்கீடு குறித்து பேசவில்லை. தேர்தல் குறித்து மட்டுமே பேசியதாகத் தெரிவித்தார்.
முன்னதாக, கூட்டணி குறித்த முடிவை விரைவில் அறிவிப்பதாக தை மாதம் வரை இழுத்தடித்து வந்த தேமுதிகவும் ஓபிஎஸ்ஸும் ஒருவழியாக திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணியில் இணைந்துள்ளனர்.
அதே போல், பாமக இரண்டாக பிளவுபட்டு இருக்கும் சூழலில், அன்புமணி தரப்பு பாமக அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அங்கு அவருக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் ராமதாஸ் அங்கும் செல்ல முடியாமல், பாமகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் விசிக இருப்பதால் திமுக கூட்டணிக்கும் செல்ல முடியாமல், கூட்டணியை முடிவு செய்யாமல் திணறி வருவது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.
இந்நிலையில், தை பிறந்தால் வழி பிறக்கும் என கூறிவந்த ராமதாஸ், கடந்த ஒரு வாரமாக, தனது தரப்பின் தலைமை நிர்வாக குழு, மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்களை அழைத்து கூட்டணி தொடர்பான கருத்துக்களை கேட்டறிந்தார்.
அதன் பின்னர், வாகனங்களில் மாற்றம் வருவது இயற்கை. தங்களுக்கான வாகனம் விரைவில் வரும் என்றும் இலக்கை நோக்கி அதில் பயணிக்கலாம் எனவும் கூறியிருந்தார்.
இந்நிலையில், எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை முடிவு எடுக்க முடியாத ராமதாஸ், இன்னும் 3 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக தெரிவித்தார். மேலும், முடிவெடுத்துவிட்டால் அதில் உறுதியாக இருப்போம், அடுத்த 3 நாட்களில் தமிழக அரசியலில் பரபரப்பு இருக்கும் என்று கூறியுள்ளார்.
மறுபுறம், தற்போது வரையிலும் தைலாபுரத்துக்கு தமிழகத்தின் முக்கிய மாநில மற்றும் தேசிய கட்சிகள் எதுவும் வராத நிலையில் ராமதாஸ் ஆதரவு நிர்வாகிகள், தொண்டர்கள் பெருமளவில் சோர்வடைந்துள்ளனர்.
கட்சியில் புதுமுகமான தனது மகளும், செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி அல்லது பேரன் முகுந்தனுக்கு ராஜ்யசபா சீட் கேட்பதாலேயே கூட்டணியை இறுதிசெய்ய ராமதாஸ் தாமதிப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.
வரும் 16ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளருக்கான மனுதாக்கல் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், 3 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிப்பதாக ராமதாஸ் கூறியிருப்பதால் அவரது முடிவை ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


