அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப்படைகள் தாக்குதலில் ஈரானில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி காமெனி மற்றும் அவரது மகள், மருமகன், பேரக்குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான டிரம்ப்பின் அறிவிப்புக்கு முதலில் மறுப்பு தெரிவித்த ஈரான் அரசு பின்னர் இதனை உறுதி செய்தது. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஈரான் அதிபர் பெசஷ்கியான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிற்குப் பதிலடி தராமல் ஓயமாட்டோம் எனக் கூறியதைத் தொடர்ந்து பதிலடி தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ஆபரேஷன் ஃபதே இ ஜாங் என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கிய ஈரான், இஸ்ரேலின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன், கத்தார், ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால், வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது.
இதற்கிடையில், ஈரானின் அடுத்த உச்சத்தலைவர் யார் வருவார் என்பது குறித்து பெரும் விவாதம் எழுந்த சூழலில், அந்நாட்டின் மூத்த மதத்தலைவர் அலிரேசா அராபி ஈரானின் இடைக்கால உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, புதிய உச்சத் தலைவரை தேர்வு செய்வதற்கான குழுவும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், அயதுல்லா அலி காமெனியின் 2வது மகன் மொஜ்தபா காமெனி (56) ஈரானின் உச்சத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஈரானின் உச்சத் தலைவரை 88 மதகுருமார்கள் அடங்கிய அமைப்பே நியமனம் செய்யவிருப்பதால், அவர்கள் மொஜ்தபா காமேனி பெயரை முன்மொழிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இது பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.


