தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மே.வங்க மாநிலங்கள் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர் நோக்கியுள்ள நிலையில், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மே.வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாகும் 37 மாநிலங்களவை பதவிகளுக்கு மார்ச் 16ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப். 26ஆம் தொடங்கியது. இன்று (மார்ச் 5) வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 16ம் தேதி நடைபெற்று, அன்று மாலை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவித்தது.
தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை இடங்கள் காலியாகவிருக்கும் நிலையில், 4 இடங்கள் திமுகவிடம் உள்ளது.
திமுக-காங். கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால், மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையும் மார்ச் 5ம் தேதி முக்கியமானதாகக் கருதப்பட்டது.
இந்த நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில், காங்கிரஸ், தேமுதிகவிற்கு தலா ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 2 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இதில் திமுக வேட்பாளர்களாக திருச்சி சிவா மற்றும் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காங்கிரஸ் தரப்பு வேட்பாளராக கிறிஸ்டோபர் திலக் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அகில இந்திய காங்கிரஸ் செயலாளராக பதவி வகித்து வருகிறார். திருச்சியைச் சேர்ந்த கிறிஸ்டோபர் திலக், வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
மறுபுறம், மாநிலங்களவை தேர்தலில் அதிமுக தரப்பில் தம்பிதுரைக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அன்புமணி தரப்பு பாமகவுக்கு ஏற்கெனவே ஒரு சீட் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


