தமிழக சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக – காங்கிரஸுக்கு இடையே 60 நாட்களுக்கும் மேலாக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.
இதனால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக கூட்டணி அமைத்து போட்டியிட்டு வரும் கூட்டணியில் பிளவு ஏற்படுமா? திமுகவை விட்டு காங்கிரஸ் பிரிகிறதா என்ற பல்வேறு கோணத்தில் அரசியல் ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் கருதினர்.
இதற்கு காரணம், இந்த முறை காங்கிரஸ் 39 தொகுதிகளும் 2 மாநிலங்களவை சீட்டுகள், ஆட்சியில் அதிகாரம் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதே ஆகும். காங்கிரஸின் மூத்த தலைவர்களும் தலைமைக்கு மிகவும் நெருக்கமாக கருதப்பட்டவர்களுமான மாணிக்கம் தாகூர் எம்பி., பிரவீன் சக்ரவர்த்தி, ஜோதிமணி எம்பி உள்ளிட்டோர் இதற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தனர்.
இது அறிவாலய வட்டாரத்தினருக்கு சற்று எரிச்சலைக் கொடுத்த போதும் காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் தலைமை பேசி கொள்ளும் என்று இருந்து விட்டனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல காங்கிரஸின் பிடிவாதம் இறுகியது.
திமுக தரப்பில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி, டிஆர். பாலு ஆகியோர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்தும் முன்னேற்றமின்றி, இழுபறி நிலை நீடித்தது.
மற்றொரு புறம், காங்கிரஸ் கூடுதல் தொகுதி, ஆட்சியில் பங்கு தர தயாராக இருக்கும் தவெக தரப்புடன் பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் தமிழக மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இதனால், ஒரு கட்டத்தில் கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கூட பரவாயில்லை என்ற நிலைக்கு திமுக சென்றுவிட்டது. பின்னர் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே அறிவுறுத்தலின்படி, முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இருவரும் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் நேற்று காலை ஆலோசனை நடத்தினர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில், திமுக-காங். இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் காங்கிரஸ் – திமுக இடையே பேச்சுவார்த்தை நடக்கும் என தகவல் வெளியானது.
அதன்படி, நேற்றிரவு முதல்வர் மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் தலைவர்கள் கிரிஷ் சோடங்கர், செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பிறகு இருதரப்புக்கும் இடையே தொகுதிப் பங்கீடு குறித்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
அதன்படி, திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தியாகியுள்ளது.
எந்த தொகுதிகள் என்பது குறித்து விவரம் வெளியாகவில்லை. இதுகுறித்து டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


