தமிழகத்தில் திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணி பிளவுபடுமா, பிரியுமா, முறியுமா என எதிர்க்கட்சிகள் ஆதங்கத்துடனும் ஆர்வத்துடனும் எதிர்பார்த்திருந்த நிலையில், முட்டுக்கொடுத்து அதனை சரிக்கட்டியுள்ளார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.
கடந்த முறையை விட கூடுதல் தொகுதி, ஆட்சி அதிகாரத்தில் பங்கு, உள்ளாட்சிகளில் பதவி என்று காங்கிரஸ் தரப்பில் வலியுறுத்தியது திமுக தலைமைக்கு தலைவலியானது.
ஆட்சியில் பங்கு என்பது தமிழகத்தில் ஒத்துவராது என்று முதல்வர் நேரடியாக மறுத்த பின்னும், காங்கிரஸ் முரண்டு பிடித்தது திமுக தரப்பினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
ஒரு கட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகினாலும் பரவாயில்லை என்ற முடிவுக்கு திமுக தலைமை சென்று விட்டது. அப்போது தான், சோனியாவும் கார்கேவும் தலையிட்டு, ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான காங்கிரஸ் மூத்த தலைவரான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மூலம் கடைசி நேரத்தில் காய் நகர்த்தியது.
இதன் பலனாக, நேற்றிரவு திமுக-காங். கூட்டணி இந்த முறையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, காங்கிரஸ் இல்லாமல் திமுக வெற்றி பெற முடியாது எனவும் திமுக உதவியின்றி காங்கிரஸ் சட்டப்பேரவைக்குள் நுழைய முடியாது என்றும் முரண்பட்ட பேச்சுகள் எழுந்தன.
முதல்வரை சென்னை அறிவாலயத்தில் நேற்றிரவு சந்தித்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூட்டணியை இறுதி செய்தனர். செல்வப்பெருந்தகை கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கிரிஷ் சோடங்கர், திமுக, காங்கிரஸ் கூட்டணி சுமூகமாக முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பாஜகவின் ஜூனியர் டீமாகவே அதிமுகவை பார்க்கிறேன். அதிமுகவை பாஜக கட்டுப்படுத்தி வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு தானாக வெற்றி பெறும் வலிமை கிடையாது. திமுக – காங்கிரஸ் கூட்டணி பிளவுபடும் என்ற அவர்களின் கனவு தற்போது தகர்ந்து போனது என்று கூறினார்.


