தமிழகத்தில் 2 நாட்களுக்கு வெப்பநிலை உயரும் – வானிலை மையம் தகவல்
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகள், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, வரும் 7 முதல் 9ம் தேதி வரை மேற்குத் தொடர்ச்சி மலைமாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மார்ச் 10ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்யக் கூடும் என்று கூறியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரை இன்றும், நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இந்நிலையில், சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் ரவிச்சந்திரன், இந்த ஆண்டு கோடை வெயில் அதிகரித்து காணப்படும். எனவே, முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.


