பீகாரில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான தேஜ கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.
இதில், பாஜ 89, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) 85, சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி ராம்விலாஸ் (எல்ஜேபிஆர்வி) 19, ஜிதன்ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா செக்குலர் (எச்ஏஎம்எஸ்) 5, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எல்எம்) 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
தேஜ கூட்டணி மொத்தமாக 202 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, பீகாரில் மீண்டும் பாஜ கூட்டணி ஆட்சி அமைந்தது. நிதிஷ்குமார் தொடர்ந்து 10 வது முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். அதே நேரம், எதிர்க்கட்சிகளான ஆர்ஜேடி 25, காங்கிரஸ் 9, ஏஐஎம்ஐஎம் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றன.
இதற்கிடையே, பீகாரில் 5 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல் வரும் 16ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பாஜ சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின், சிவேஷ் குமார் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், ஜேடியூ சார்பில் நிதிஷ் குமார், ராம்நாத் தாகூர் ஆகியோர் களமிறங்க உள்ளனர்.
இதனிடையே, நிதிஷ்குமார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக உள்ளதாகவும் அவரது மகன் நிஷாந்த்குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியாகின. இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், முதல்வர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில், தனது அரசியல் பயணத்தின் தொடக்கத்திலிருந்தே, பீகார் சட்டப்பேரவையின் இரு அவைகளிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை இருந்து வருகிறது.
இதனை நிறைவேற்றும் வகையில், இந்த முறை மாநிலங்களவை உறுப்பினராக விரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும், புதிய அரசுக்கு தனது முழு ஒத்துழைப்பும் வழிகாட்டுதலும் இருக்கும் எனவும் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நிதிஷ் மாநிலங்களவை எம்பி தேர்தலுக்கான வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். இதன் மூலம், 10 முறை முதல்வர் என்ற அவரது சாதனை முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அவர் முதல்வர் பதவியை விரைவில் ராஜினாமா செய்ய உள்ளார்.
நிதிஷ் ராஜினாமா செய்யும் பட்சத்தில், பீகார் பாஜகவில் இருந்து நேரடியாக ஒருவர் முதல்வராக பதவியேற்பார் எனத் தெரிகிறது.


