சனி பகவான் 12 ராசிகளிலும் தலா 2 1/2 ஆண்டுகள் சஞ்சரிக்கும் கால சுழற்சியையே ‘சனிப்பெயர்ச்சி’ என்று அழைக்கிறோம். இந்து மதத்தில், ஆன்மீக ரீதியாக குரு, ராகு-கேது மற்றும் சனிப்பெயர்ச்சி ஆகிய மூன்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மற்ற கோயில்களில் நவகிரகங்களிலோ அல்லது தனி சிலையாகவோ சனி பகவான் அருள் பாலிப்பார். ஆனால், நவக்கிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கென தனி சந்நிதி கொண்டு, பரிகார ஸ்தலங்களில் முதன்மை இடமாக விளங்குவது காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலாகும்.
பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி, சனி பகவான் இன்று காலை சரியாக 8:24 மணிக்கு கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்குள் பிரவேசித்தார்.
இதில், புதுச்சேரி, தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து வந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, “சனீஸ்வரா” என்று பக்தி பரவசத்துடன் முழக்கமிட்டு சுவாமியை தரிசித்தனர்.
அந்த நேரத்தில், சனி பகவானுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட மங்களப் பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, மலர் அலங்காரங்களுடன் கூடிய மகா தீபாராதனை காட்டப்பட்டது.
இதனையொட்டி, கோயிலுக்கு சொந்தமான நலன் குளத்தில் புதிய நீர் நிரப்பப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீராடினர். அங்கு சுகாதாரத்தை பேணி பாதுகாக்க குளத்தில் சோப்பு அல்லது ஷாம்பு போன்றவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குளத்தை சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
நடமாடும் மருத்துவமனைகள் மற்றும் முதியோர்களுக்கான இ-ஆட்டோ சேவைகள் தயாராக இருக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பக்தர்களின் வசதிக்காக ஆன்லைன் மூலம் சிறப்புத் தரிசன டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி, விஐபி தரிசனத்துக்கு ரூ. 1,000, சிறப்பு தரிசனத்துக்கு ரூ. 600, விரைவு தரிசனத்துக்கு ரூ. 300 வசூலிக்கப்படுகிறது.
மேலும், பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்களுக்காகச் சிறப்பு அபிஷேகத்திற்கு ரூ.500, சகஸ்ரநாம அர்ச்சனைக்கு ரூ.300, மற்றும் திலசூரண நைவேத்திய அர்ச்சனைக்கு ரூ.300 எனத் தனிக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டு, சீரான முறையில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
திருநள்ளாறு சனிப்பெயர்ச்சியை ஒட்டி அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மார்ச் 6, 7 தேதிகளில் விழுப்புரம் – நாகை இடையே சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு பகல் 1.05 மணிக்கு நாகை சென்றடையும்; மறுமார்க்கமாக பகல் 1.20 மணிக்கு புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


