இந்தியாவில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த 2011ம் ஆண்டு கடைசியாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு கொரோனா காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போதும் 2 கட்டங்களாக எடுக்கப்படுவது வழக்கமாகும்.
இந்நிலையில், 2027ம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, நாடு முழுவதும் 2 கட்டங்களாக நடத்தப்படும் எனவும் முதற்கட்டப் பணிகள் வரும் 2027 ஏப்.1 முதல் செப். 30 வரை நடைபெறும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, முதல் கட்டத்தில் வீடுகளை பட்டியல் கணக்கிடும் பணியும், 2வது கட்டத்தில் தனி நபர்களின் விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.
அந்த வகையில், வீடுகளை பட்டியலிடுவதற்கான முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பில் பொதுமக்களிடம் 33 வகையான கேள்விகள் கேட்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் முதற்கட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி ஜூலை 17ம் தேதி தொடங்கி ஆக.30 வரை, 45 நாட்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு, அரசிதழ் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில், 2027ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான முதற்கட்டப் பணியான வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு, 2026ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி தொடங்க உள்ளது. இதில் 33 கேள்விகள் கேட்கப்பட்டு அவற்றின் விவரங்கள் டிஜிட்டல் முறையில் சேகரிக்கப்பட உள்ளது.
வீட்டின் உரிமை நிலை, வீட்டின் சுவர், கூரை மற்றும் தரை கட்டுமானத்திற்கு என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்பட்டன, வீட்டில் எத்தனை குடும்பங்கள் வசிக்கின்றன, வீட்டில் உட்கொள்ளும் உணவு, குடிநீர் ஆதாரம், எல்பிஜி, தொலைக்காட்சி, மொபைல் போன், கணினி, இணைய வசதி மற்றும் கழிப்பறை வசதி, சொத்து விவரங்கள் உள்ளிட்ட 33 வகையான கேள்விகள் பொதுமக்களிடம் கேட்கப்பட உள்ளன.
உள்ளூர் பகுதிகளின் எல்லைக்குள் இருக்கும் வீட்டுப் பட்டியல் மற்றும் வீடு எண்ணிக்கை அட்டவணைகளின் மூலம், பொதுமக்களிடம் கேள்வி கேட்டு தரவுகளை சேகரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


