தமிழ்நாடு, நாகாலாந்து, மே.வங்கம் உள்பட 8 மாநிலங்களுக்கு ஆளுநர்களை மாற்றம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மே.வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மாநிலங்களில் போன்று இங்கும் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இங்கு திரிணாமுல் காங்கிரஸ் – பாஜக இடையே கடுமையான இருமுனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அம்மாநில ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் அவரது பதவியை நேற்று திடீரென ராஜினாமா செய்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள பதிவில், ஆனந்த போஸ் ராஜினாமாவுக்கான காரணங்கள் தற்போது வரை தெரியவில்லை. இருப்பினும், நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு முன்னதாக, அரசியல் நலன்களுக்காக மத்திய உள்துறை அமைச்சரின் அழுத்தங்களுக்கு ஆளுநர் ஆளாகியிருந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
மே.வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். ஆனால் ஆளுநர் நியமனத்துக்கு முன் மாநில முதல்வருடன் கலந்து ஆலோசிக்கும் மரபை அமித் ஷா பின்பற்றாதது வருத்தமளிப்பதாகப் பதிவிட்டுள்ளார்.
மே.வங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த் போஸ் பதவியை ராஜினாமா செய்த நிலையில், தமிழக ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என். ரவி அம்மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு, தமிழ்நாட்டின் ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர், தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது, நீட் உள்ளிட்ட மசோதாக்களை தாமதப்படுத்தி திருப்பி அனுப்பியது உள்பட தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வந்தார். இதனால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வந்தன.
அதே நேரம், தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடக்கவிருக்கும் நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு முழு நேர ஆளுநராக யாரை நியமிக்கும், எப்போது நியமிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


