சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கவிருக்கும் டெக்ஸா திரைப்படத்தின் பூஜை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு வாக்குக்கு பணம் கொடுக்காத அரசியல் பண்பாட்டை ஏற்கும் கட்சிகள் வந்தால் மட்டுமே கூட்டணி பற்றிச் சிந்திக்க முடியும் என தனது நிலைப்பாட்டை தெரிவித்தார்.
மேலும், கரூர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் எனவும் தமிழ்நாட்டில் சினிமா பெரிய மதமாக மாறிவிட்டது என்றும் சீமான் கூறினார்.
ஆஸ்கார் விருது வென்ற ஏஆர் ரகுமான் சமீபத்தில், திரையுலகில் திறமையை பார்ப்பதில்லை. சினிமாத்துறை சமூகம் சார்பானதாக மாறி விட்டது. படைப்பாற்றல் இல்லாதவர்களே அனைத்து முடிவுகளையும் தீர்மானிக்கும் சக்தியுடன் இருப்பதாகவும் இது சமூகம் தொடர்பானதாக இருக்கலாம் என்று மதம் சார்ந்த பாகுபாடுகள் இருப்பதைச் சூசகமாகக் கூறியது பேசுபொருளானது.
இதற்கு பாலிவுட் பாடகர் அனுப் ஜலேட்டா, நடிகை கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் எதிர்ப்பும் பாடகர் சங்கர் மகாதேவன், பாடகி சின்மயி ஆகியோர் ஆதரவும் தெரிவித்திருந்தனர்.
இதனைக் கருத்தில் கொண்டே சீமான் தற்போது சினிமா பெரிய மதமாக மாறிவிட்டது என்று கூறியிருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் விவாதித்து வருகின்றனர்.
