சென்னையில் வீடு மற்றும் வர்த்தக உபயோகத்துக்கான சமையல் எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா படைகள் இணைந்து நடத்தும் கூட்டுத் தாக்குதலால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு பெரிதும் பயன்படுத்தப்பட்டு வந்த ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது.
இதனால், இந்தியா உள்பட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ளதால், உலகளவில் எரிபொருள் விநியோகம் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியா குறுகிய காலத்துக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து கொள்ள அமெரிக்கா அனுமதித்துள்ளது.
இதனிடையே, இந்தியாவை பொறுத்தவரை 3 வாரத்திற்கு தேவையான கச்சா எண்ணெய், எரிபொருள் இருப்பு உள்ளதாகவும், விலையேற்றத்துக்கு வாய்ப்பு இருக்காது எனவும் மத்திய அரசு கூறி வந்த நிலையில், போர் சூழலை பயன்படுத்தி, நள்ளிரவு முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது.
அதன்படி, வீட்டு உபயோகத்துக்கான எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.60 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.868.50ல் இருந்து ரூ.928.50ஆகவும், 19 கிலோ எடை கொண்ட வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.114.50 உயர்ந்து ஒரு சிலிண்டர் ரூ.2,043.50 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் எதிரொலியால் உலக பொருளாதாரம் பெரியளவில் பாதிக்கப்படும் சூழலில், இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயர்வுடன், பணவீக்கம் அதிகரிக்கவும், பெட்ரோல், டீசல் விலை உயரவும் வாய்ப்பு உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
