தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்டதால் திமுகவுடனான கூட்டணி உறுதிசெய்யப்படுமா என்ற இழுபறி நிலை கடைசிவரை நீடித்தது.
இதனைத் தூண்டும் வகையில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வந்ததும், ராகுலுக்கு மிகவும் நெருக்கமான தலைவர்களாக பார்க்கப்படும் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் மறைமுகமாக தவெகவுடன் தொடர்பில் இருந்ததும் திமுக தலைமையை எரிச்சலடையச் செய்தது.
இது தவிர, ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ராகுல் சகோதரர் என்ற வார்த்தையை தவிர்த்ததும், அதே பாணியில் ராகுலுக்கு முதல்வர் பதிலளித்ததும் கூட்டணி முறிவை உறுதிபடுத்துவதாக அமைந்தன.
இந்நிலையில் தான், சோனியா மற்றும் கார்கேவின் அறிவுறுத்தலின்படி காங். மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சந்தித்து பேசினார்.
இந்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளும் +1 மாநிலங்களவை இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனிடையே, கடந்த 2 தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை மே.வங்க மாநில ஆளுநராக நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, தமிழக ஆளுநர் மாற்றப்பட்டது வருந்தத்தக்கது. ஏனென்றால், அவர் திமுக-காங். கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக இருந்ததாகவும் அவருடைய தொடர்ச்சியான தமிழர் விரோத போக்கு, தமிழ்நாட்டை மோசமான மாநிலமாக சித்தரித்தல், திருவள்ளுவருக்கு காவி அடித்தல், ஆளுநர் மாளிகையை அதிகாரப்பூர்வமற்ற பாஜக தலைமை அலுவலகமாக செயல்பட வைத்ததாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும் கூறுகையில், தமிழக ஆளுநர் மாற்றம் என்பது தமிழகத்தில் வெற்றி பெற முடியாது என்ற பாஜகவின் நிலைபாட்டை காட்டுவதாகவும் இத்தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி 3வது இடத்துக்கு தள்ளப்படுவது மட்டுமின்றி தமிழகத்தில் அதிமுக சந்திக்கும் கடைசி தேர்தலாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
