சென்னை உயர் நீதிமன்றத்தின் 55வது தலைமை நீதிபதியாக ம.பி.யைச் சேர்ந்த சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி நேற்று பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ரகுபதி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கடராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரியை மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
அதே போல், தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த வாரம் ஆளுநர் ஆர்.என். ரவியை மேற்கு வங்க ஆளுநராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டதைத் தொடர்ந்து விரைவில் அங்கு செல்லவுள்ளார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்று ஆர்.என். ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆளுநர் ஆர்.என். ரவியும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
கடந்த 2021 செப்டம்பர் 18ம் தேதி தமிழகத்தின் 26வது ஆளுநராக பதவியேற்றது முதல் தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தாலும், . தேர்தல் வரை ஆர்.என். ரவி தமிழகத்தில் கவர்னராக தொடர வேண்டும் என்று முதல்வர் கூறி வந்த நிலையில், அவர் தற்போது மே.வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் புதிய ஆளுநராக (பொறுப்பு) கேரள மாநில ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.
