தமிழ் திரையுலகின் உச்ச நடிகரும், தவெக தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா கடந்த மாத இறுதியில் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் விஜய் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்த அவர், விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
சங்கீதாவின் குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை திருவான்மியூரில் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் திருமண நிகழ்வுக்கு ஒரே காரில், ஒரே வண்ண பட்டாடையில் நடிகை த்ரிஷாவுடன் நேற்று முன் தினம் விஜய் பங்கேற்றார். இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த பரபரப்பான சூழலில், விஜய் மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ள நிலையில், நீலாங்கரை வீட்டில் அனுமதிக்க விஜய் மறுப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், விவாகரத்து வழக்கு முடியும் வரை, தன்னை சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் தங்க அனுமதிக்க கோரினால், வழக்கறிஞர் மூலமாக விஜய் தரப்பினர் மிரட்டுவதாகவும், விஜய் தங்கியிருக்கும் வீட்டில் தனக்கும் சரிபாதி பங்கு இருப்பதாகவும் சங்கீதா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த வீடு தான் தங்களது திருமண வாழ்க்கையின் முக்கியமான இல்லமாக இருப்பதாகவும், வழக்கு முடிவடையும் வரை அங்கு தங்க அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே தாக்கல் செய்த முதல் மனுவில் நியாயமான ஜீவனாம்சம் கோரியுள்ளதாகவும் நடிகர் விஜயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் மன உளைச்சல்கள் காரணமாகவே இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றதாகவும், திருமண உறவு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை அடுத்து வரும் நாட்களில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
