மக்களவையில் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவும் எதிர்க்கட்சிகளிடம் பாரபட்சமாகவும் நடந்து கொள்வதாக கூறி பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மான நோட்டீசை சமர்ப்பித்தன. இதில், 118 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்காத விவகாரம் பெரும் சர்ச்சையானது. மேலும், எதிர்க்கட்சி பெண் உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை அவமரியாதை செய்யும் வகையில் நடந்து கொள்ளத் திட்டமிட்டதாகவும் ஓம் பிர்லா வெளிப்படையாக அறிவித்தார்.
இந்த விவகாரத்தில் சபாநாயகரின் நடவடிக்கையை எதிர்த்து கேள்வி கேட்ட 8 எம்பிக்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, மக்களவை காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் உள்ளிட்டோர் சபாநாயகர் ஓம் பிர்லாவை பதவி நீக்கக் கோரி, அரசியலமைப்பின் 94சி பிரிவின் கீழ், தீர்மானத்திற்கான நோட்டீசை மக்களவை செயலாளரிடம் வழங்கினர்.
இதில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள்,தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, ஆர்ஜேடி, சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 எம்பிக்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இதையடுத்து, நாடாளுமன்ற விதிமுறைகளின்படி, மார்ச் 9ம் தேதி மக்களவை மீண்டும் கூடியதும் முதல் நாளன்று சபாநாயகருக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானம் மீதான விவாதமும் அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பும் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்ட அமர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் தொடங்குகிறது. இதில், சபாநாயகர் ஓம் பிர்லா தகுதி நீக்கம் தொடர்பான தீர்மானம் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ஓம் பிர்லா அவையை வழிநடத்தாமல் ஆளுங்கட்சி எம்பிக்கள் வரிசையில் அமர்ந்து தீர்மானத்தை கவனிப்பார்.
மேலும், தீர்மானத்தை தாக்கல் செய்யும் போது எதிர்க்கட்சித் தரப்பில் குறைந்து 50 பேர் எழுந்து நின்று தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தால் மட்டுமே அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
