அகமதாபாத்தில் நடந்த டி-20 உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின.
இதில் முதலாவது பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 52, சஞ்சு சாம்சன் 89, இஷான் கிஷன் 54 ரன்கள் அடித்து அசத்த இந்தியா 255 ரன்கள் குவித்து வரலாறு படைத்தது. இது உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களாகும்.
மேலும், இது நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக இந்தியா கோப்பையை வென்ற மேட்சாகும். ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளுடன் ஆட்டநாயகனாகவும், சஞ்சு சாம்சன் தொடர்நாயகனாகவும் தேர்வாகினர்.
256 ரன்கள் என்ற இமாலய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி பவர்பிளேவுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் 72 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுக்க 19 ஓவரில் 159 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம், இந்திய அணி 3வது முறையாக டி20 உலகக்கோப்பை வென்று வரலாறு படைத்தது.
டி20 உலகக்கோப்பையை 3வது முறையாக இந்திய அணி வென்று சாதித்திருப்பதை உலகம் முழுவதும் பாராட்டும் நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாகச் சாடியுள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், தெருவில் உள்ள பணக்கார வீட்டுப் பையன், அக்கம்பக்கத்தில் இருக்கும் ஏழைக் குழந்தைகளை எல்லாம் அழைத்து ‘வாங்க கிரிக்கெட் விளையாடலாம்’ என்று கூறுவதைப் போலத்தான் இந்தியா நம்முடன் நடந்துகொள்கிறது. எட்டு அணிகள் இருந்தால், அதில் நான்கு அணிகளை மட்டும் வைத்துக்கொண்டு, அந்த நான்கில் இருந்து மூன்றை மீண்டும் அழைத்து விளையாடி, இறுதியில் ‘பாருங்கள், ஜெயித்துவிட்டேன்’ என்று இந்தியா சொல்கிறது. இதுதான் தற்போது நடக்கிறது. இந்தியா ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டையே அழித்துவிட்டது என விமர்சித்துள்ளார்.
இதற்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்திய அணியின் வெற்றியை அவரால் தாங்கிக்கொள்ள முடியாத நிலையிலேயே, இப்படி சாடியுள்ளார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுவரை நியூசிலாந்து டி20 உலகக்கோப்பையில் தோற்றதே இல்லை. ஐசிசி இறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்தை வென்றதே இல்லை என்னும் நிலையில் இந்தியாவின் வெற்றி குறிப்பிடத்தக்கது.


