தமிழகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த வாரம் ஆளுநர் ஆர்.என். ரவியை மேற்கு வங்க ஆளுநராக நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டதைத் தொடர்ந்து விரைவில் அங்கு செல்லவுள்ளார்.
தமிழகத்தின் 26வது ஆளுநராக பதவியேற்றது முதல் தமிழக அரசுக்கு தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வந்தாலும், தேர்தல் வரை ஆர்.என். ரவி தமிழகத்தில் ஆளுநராக தொடர வேண்டும் என்று முதல்வர் கூறி வந்த நிலையில், அவர் தற்போது மே.வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை (மார்ச் 7) ஆளுநர் ஆர்.என். ரவியை சென்னை கிண்டியில் உள்ள அவரது மாளிகையில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது சால்வை அணிவித்து, திருவள்ளுவர் சிலையை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆளுநர் ஆர்.என். ரவியும் முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.
மேற்குவங்க ஆளுநராக இருந்த சி.வி. ஆனந்த போஸ் பதவி விலகியதைத் தொடர்ந்து, அம்மாநிலத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் கூடுதலாக கவனிப்பார் என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு அறிவித்தார்.
இந்நிலையில், ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், நேற்றிரவு சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று பகல் 12.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அர்லேகருக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.
முன்னதாக, சென்னையிலிருந்து ஆர்.என்.ரவி, நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து மே.வங்கத்துக்கு சென்ற அவருக்கு ஆளுநர் மாளிகையில் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து, மே.வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பார் எனத் தெரிகிறது.


