தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, இம்மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் துணைத் தேர்தல் ஆணையர்கள் தலைமையில் சென்ற குழு தேர்தல் நடத்துவதற்கான தயார்நிலை குறித்த ஆய்வு மேற்கொண்டது.
இதன் அடிப்படையில், இம்மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்க உள்ளது.
இதனிடையே, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் உள்ள திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்கி, அதில் ஓரளவு வெற்றியை எட்டியுள்ளது என்று கூறலாம்.
அதே நேரம், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் உள்ள அதிமுகவின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடர் தோல்வியில் முடிந்து வருவது அக்கட்சியின் தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக-பாஜக இடையே கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக இழுபறி நீடித்து வருகிறது. பிரதமர் மோடி கடந்த 1ம் தேதி மதுரை வருவதற்கு முன்பு பியூஷ்கோயல் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உத்தரவின்படி,இபிஎஸ் உடனடியாக டெல்லி விரைந்து சென்று அவரை சந்தித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் பஞ்சப்பூரில் நடந்த என்டிஏ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சி சென்றிருந்த மத்திய அமைச்சரும், பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி இருந்தார்.
அங்கு அவரை சந்திக்க சென்ற இபிஎஸ் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி.வேலுமணி, தங்கமணி, சி.விஜயபாஸ்கர், சிவபதி உள்பட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.
இதன் போது, தென் மாவட்டங்களை குறி வைத்து தாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுத்து விட்டு, கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கு நீங்கள் கொடுக்கும் தொகுதிகளை கொடுத்து கொள்ளுங்கள் என அதிமுகவுக்கு சாதகமாக உள்ள முக்கிய தொகுதிகளை பியூஷ்கோயல் கேட்டதற்கு இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்து விட்டார். இதனால், தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமுமின்றி தோல்வியில் முடிந்தது.
தற்போது 2வது கட்டமாக நடத்திய பேச்சுவார்த்தையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால் அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அதிருப்தி அடைந்து உள்ளன.
இதனால், பிரதமர் மோடி, அமித் ஷா மூலம் அழுத்தம் தர பாஜ மேலிடம் முடிவு செய்துள்ளதால், அவசரகதியில் இபிஎஸ் மீண்டும் டெல்லி செல்ல வாய்ப்பு உள்ளதாக இலைத் தரப்பினர் வட்டாரத்திலேயே கூறப்படுகிறது.


