தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக அரசியல் களம் பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது.
மீண்டும் ஆட்சியை தக்கவைக்க திமுகவும், ஆட்சியை கைப்பற்ற அதிமுகவும் மெகா கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள உள்ளன. இது தவிர, நடிகர் விஜயின் தவெக, சீமானின் நாதக கட்சிகளும் களத்தில் உள்ளதால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
இதையடுத்து, அனைத்து கட்சிகளும் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் நேர்காணல் ஆகியவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனிடையே, தேர்தல் பணியை காரணம் காண்பித்து சிபிஐ விசாரணைக்கு கால அவகாசம் கோரியிருப்பதால் தவெக தலைவர் விஜயும் 60 வேட்பாளர்களிடம் மட்டும் நேற்று நேர்காணல் நடத்தி உள்ளார்.
திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் டி.ஆர். பாலு தலைமையிலான அக்கட்சியின் தொகுதி பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக, ஐயூஎம்எல், மமக ஆகியவற்றுக்கு தலா 2 தொகுதிகளை திமுக ஒதுக்கியிருந்தது. அதன் பின்னர், காங்கிரசுக்கு 28 சட்டப்பேரவைத் தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வைக்கும் வைகோவின் மதிமுகவிற்கு கடந்த தேர்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையி, தற்போது 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், 3 தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், 1 தொகுதியில் தனிச் சின்னத்திலும் மதிமுக போட்டியிட உள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி அல்லது சாத்தூர் தொகுதியில் தனிச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் 4 தொகுதிகளும், சொந்த சின்னத்தில் போட்டியிட்டால் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க முடியும் என மதிமுகவிடம் திமுக வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


