அமெரிக்கா- இஸ்ரேல் கூட்டுப்படைகள் இணைந்து ஈரானுக்கு எதிராக கடந்த மாதம் 28ம் தேதி நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி, அவரது குடும்பத்தினர் மற்றும் முக்கிய ராணுவத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து, இஸ்ரேலுக்கு எதிராகவும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகள் மற்றும் தூதரகங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதன் காரணமாக, மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவுகிறது.
ஈரானையும் ஓமான் நாட்டையும் பிரிக்கும் 33 மீட்டர் குறுகிய கடல் பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. இதன் வழியாக தினமும் சுமார் 2 கோடி பேரல்கள் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது. இது சர்வதேச கச்சா எண்ணெய் பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பங்காகும். உலக நாடுகளின் திரவ இயற்கை எரிவாயு (எல்என்ஜி) வர்த்தகத்தில் சுமார் 20% இந்த நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.
இதனால், உலகம் முழுவதும் எண்ணெய் வர்த்தகம் முடங்கியுள்ளது. இதன் வழியாக கடக்கும் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 40% பங்கு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து குறிப்பாக வளைகுடா நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் நிலையில், இந்த நீரிணை போக்குவரத்து தடையினால், உலக நிதி சந்தைகள் முதல் இந்தியாவின் எரிவாயு வினியோகம் வரை பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
சீனா, இந்தியா, தென் கொரியா, ஜப்பான் போன்ற முக்கிய ஆசியச் சந்தைகள் ஹோர்முஸ் வழியான எண்ணெய் போக்குவரத்தை மிகவும் சார்ந்துள்ளன.
ஈரானின் கடற்படை தளபதி அலிரேசா தாங்சிரி அவரது வலைதளப் பதிவில், ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்ல விரும்பும் கப்பல்கள் ஈரானின் முன்அனுமதி பெறாவிட்டால், தாக்குதலுக்குள்ளாகக் கூடும் என எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்காத கப்பல்கள் மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாக பாதுகாப்பாக செல்லலாம் என்று ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், இந்தியக் கொடி ஏற்றப்பட்டுள்ள கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து செல்ல ஈரான் அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகாச்சியுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து, வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியக் கொடி ஏந்தி வரும் கப்பல்கள், ஹார்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது. இந்திய எண்ணெய் கப்பல்களான புஷ்பக் மற்றும் பரிமல் ஆகியவை ஹோர்முஸ் நீரிணையை கடந்து இந்தியா வருகின்றன.
இதன் மூலம், இந்தியாவில் தற்போது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று தெரிகிறது.
அதே நேரம், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புள்ள கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


