தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிடவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருட்களை தடுக்கத் தவறிய தமிழக அரசுக்கு கண்டனமும், தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் வகையில் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெறவும் வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தவெக சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒருபகுதியாக, சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ஆதவ் அர்ஜுனா, தமிழ்நாட்டில் எம்ஜிஆருக்கு பிறகு பிரபலமான தலைவராக ரஜினி அரசியலுக்கு வர நினைத்தார். மொத்த சிஸ்டத்தையும் மாற்றி, நல்லது செய்ய நினைத்த அவருக்கு திமுக குடும்பம் மிரட்டல் விடுத்து அரசியலுக்கு வராமல் பார்த்து கொண்டதாகவும் ஆனால் தற்போது ரஜினி அவர்களது தயாரிப்பு நிறுவனமான ரெட்ஜெயின்ட் மூவிஸ் படத்தில் நடித்து கொண்டிருப்பதாகவும் விமர்சித்தார்.
இது ரஜினியை விமர்சிப்பதற்காக சொல்லவில்லை. ஆனால் இவற்றை எல்லாம் கடந்து திமுகவுக்கு எதிராக விஜய் நிற்கிறார் என்றால் நம் தலைவர் விஜய்க்கு மன வலிமை அதிகம் என்றார்.
மேலும், மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தனித்து போட்டியிட்டு வந்த வைகோ, திமுகவுடன் கூட்டணி வைத்தார். இன்றைக்கு அந்தக் கட்சிக்கு 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று கூறி டிவி எல்லாம் உடைத்த கமல்ஹாசன், 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ் என அனைவரும் கடைசியில் திமுக கூட்டணியில் இணைந்து விட்டனர். ஆனால் நம்முடைய தலைவர் மட்டும்தான் மன உறுதியுடன் களத்தில் நிற்கிறார்” என ஆதவ் அர்ஜுனா பேசியுள்ளார்.


