தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் அவரது நெருங்கிய தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன், திவாகரன் ஆகியோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதையடுத்து, டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சியையும், திவாகரன் அண்ணா திராவிடர் கழகம் கட்சியையும் தொடங்கினர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை சென்ற சசிகலா வெளியே வந்த பின்பு,அவருக்கும் தினகரனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதே நேரம், கடந்த 2022ம் ஆண்டு திவாகரன் அவரது கட்சியை சசிகலா தலைமையின் கீழ் கொண்டு வந்தார்.
இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்.24ம் தேதி அவரது தோழி சசிகலா கட்சி தொடங்க இருப்பதாக தகவல் வெளியானது.
அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளன்று புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதாக சசிகலா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய அவர், புதிய கட்சியின் பெயர் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், சசிகலா இன்று தன்னுடைய புதிய கட்சியின் பெயரை ’அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என அறிவித்ததுடன், 4 தென்னை மரங்கள் அடங்கிய தென்னந்தோப்பு சின்னத்தை தேர்வு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


