நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறையின் ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள் சீமானுக்கு அடுத்துள்ள முக்கியமானவர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர். இவர் கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றவர்.
ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் அவருக்கும் இடையே பனிப்போர் நடந்து வந்ததாகக் கூறப்பட்டது. இது நாளடைவில் வெளிப்படையாக தெரியத் தொடங்கிய நிலையில் கடந்தாண்டு பிப்ரவரியில் நாதகவில் இருந்து காளியம்மாள் விலகினார்.
அதன் பின்னர், அவர் பல்வேறு கட்சிகளில் இணையப்போவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், காலம் வரும்போது அறிவிப்பதாக காளியம்மாள் கூறி வந்தார்.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்ஸை சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் இன்று சந்தித்த காளியம்மாள் அதிமுகவில் இணைந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த தேர்தல் முதல் மீண்டும் என்னுடைய அரசியல் பயணம் அதிமுக மூலம் தொடரும். நான் அதிமுகவைத் தேர்வு செய்ததற்குக் காரணம், இந்த தலைமையை ஏற்றிருக்கக் கூடியவர் அடிப்படையில் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்.
சாமானியக் குடும்பத்திலிருந்து வந்து தலைமையை எட்ட முடியும் என்ற ஜனநாயகச் சூழல் இருப்பதாலேயும் தமிழனுடைய தலைமையின் கீழ் இயங்குவதற்கான ஒரு மன உறுதியுடன் இருந்ததனாலேயும் அதிமுகவில் இணைந்தேன் என்று தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், நெருங்கும் நிலையில் காளியம்மாள் அதிமுகவில் இணைந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.


