தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், வரும் தேர்தலில் 200 இடங்களில் வென்று 2வது முறையாக ஆட்சியில் அமரும் முனைப்புடன் களத்தில் இருக்கும் திமுக தரப்பில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக தொகுதிப் பங்கீடு குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, மதிமுக, விசிக, மநீம, தவாக, இ.கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், ஐயூஎம்எல், மமக உள்பட 20 கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தற்போது வரை, காங்கிரஸுக்கு 28, மதிமுகவுக்கு 4, ஐயூஎம்எல், மமகவுக்கு தலா 2 தொகுதிகள் என மொத்தம் 36 தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.
இதில், காங்கிரஸ் கட்சி கை சின்னத்திலும், ஐயூஎம்எல் ஏணிச் சின்னத்திலும், மமக திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும், மதிமுக 3 தொகுதிகளில் திமுக சின்னத்திலும் ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட உள்ளன.
இந்நிலையில், திமுக கூட்டணியில் கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கையெழுத்திட்டனர். அதன்படி, கடந்த முறை போல் இம்முறையும் கொமதேக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.
திமுக தரப்பில் தற்போது வரை, 5 கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. இதுவரை கூட்டணிக் கட்சிகளுக்கு மொத்தம் 38 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


