தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டப்பேரவைப் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.
இதனையொட்டி, தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து, 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வெளியிட்டார்.
அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும். மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார்.
இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30ம் தேதி தொடங்கவுள்ளது. வேட்புமனு தாக்கல் கடைசி நாள் ஏப்.6 தேதியும், வேட்புமனு பரிசீலனை ஏப்.7ம் தேதியும் வேட்புமனு திரும்ப பெற கடைசி நாள் ஏப்.9 ஆகும்.
அதே போல், புதுச்சேரியில் உள்ள 30, கேரளாவின் 140 மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு ஏப்.9ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு அதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே.வங்கத்தில் ஏப்.23 மற்றும் 29 தேதிகளில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் முறையே 152 மற்றும் 142 தொகுதிகளில் என 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 2.77 கோடி ஆண்கள், 2.89 கோடி பெண்கள், 7,617 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் முதல் முறையாக வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை 12.51 லட்சம் ஆகும்.
ஐந்து மாநிலங்களிலும் சேர்த்து 824 தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் பணிகளில் 25 லட்சம் பேரும் பாதுகாப்புப் பணியில் 8.5 லட்சம் பேரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
ஐந்து மாநிலங்களிலும் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 75,032 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.
ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரங்கள் அறிவிக்கப்படும். வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்காளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இடம்பெறும். வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கையை அமைதியான முறையில் நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், உடனடியாகத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, அரசு தலைமைச் செயலகம் மற்றும் அலுவலகங்களில் உள்ள முதல்வரின் புகைப்படங்கள், அனைத்து கட்சிகளின் போஸ்டர்கள் மற்றும் அரசின் சாதனை திட்டங்கள் குறித்த புகைப்படங்களை அகற்றும் பணியில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.


