தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.
இதனையொட்டி, இம்மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் சென்ற குழு தேர்தல் தயாரிப்பு நிலை குறித்து அரசு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஏப்.9ம் தேதி, தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் மே.வங்கத்தில் 2 கட்டங்களாக ஏப்.23 மற்றும் 29 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அடுத்த வாரம் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தலைமை தாங்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் இபிஎஸ் ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறார்.
இந்நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் பொறுப்பாளர் தமிழிசை சவுந்தரராஜனுடன் தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று இறுதி கட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இதில், தமிழகத்தில் பாஜக தரப்பில் இருந்து ஏற்கனவே மக்கள் கருத்துகள் கேட்கப்பட்டுள்ள நிலையில், இதர அரசியல் கட்சிகளைப் போன்று பெண்களை அதிகளவில் மையப்படுத்திய தேர்தல் அறிக்கையை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இது தவிர, மத்திய அரசு மூலம் தமிழகத்திற்கு என்னென்ன திட்டங்களை தனித்துவமாகக் கொண்டு வர முடியும், தேர்தல் வாக்குறுதியாக சேர்க்க முடியும் எனவும் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு என பாஜக திட்டமிடல் வைத்திருப்பதாகவும் தமிழிசை தெரிவித்துள்ளார்.
எனவே, இதன் அடிப்படையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டு அடுத்த வாரம் வெளியாகும் என கமலாலய வட்டாரங்கள் கூறுகின்றன.


