தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மே.வங்கம் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது.
இதனையொட்டி, இம்மாநிலங்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் சென்ற குழு தேர்தல் நடத்துவது குறித்து அரசு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இதைத் தொடர்ந்து இந்த 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஏப்.9ம் தேதியும், தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் எனவும் மே.வங்கத்தில் 2 கட்டங்களாக ஏப்.23 மற்றும் 29 தேதிகளில் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கல் செய்ய ஏப்.6ம் தேதி கடைசி நாளாகும்.
இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாட்டில் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலான 12 மணி நேரத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்.23ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வேட்புமனுக்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 வரை பெறப்படும் என்றும் கூறினார்.
இந்நிலையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மாலை 3 மணிக்கு முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். தேர்தல் நேர விதிமுறைகள், தேர்தல் செலவு தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


