தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று வெளியிட்டார்.
அதன்படி, புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கு ஏப்.9ம் தேதியும், தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கு ஏப்.23ம் தேதியும் ஓரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நாளை முதல் மார்ச் 22ம் தேதி வரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்த உள்ளார்.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், மார்ச் 17ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கான நேர்காணல் நடைபெறும்.
மார்ச் 18ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான நேர்காணல் காலை 9 மணிக்கு நடைபெறும். அன்று மாலையில் மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான நேர்காணலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மார்ச் 19 மற்றும் 20ம் தேதிகளில் கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, வேலூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும், மார்ச் 21ம் தேதி திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கும் நேர்காணல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 22ம் தேதி சென்னை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. குறிப்பிட்ட தேதிகளில் விருப்ப மனு அளித்தவர்களுடன் மாவட்டச் செயலாளர்கள் மட்டும் உடன் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


