தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மே.வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரி, கேரளா, அசாம் மாநிலங்களில் ஏப்.9ம் தேதியும் தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஆனால், மே.வங்கத்தில் மட்டும் ஏப்.23ம் தேதி முதல் கட்டத்தில் 152 தொகுதிகளுக்கும் ஏப்.29ம் தேதி 2ம் கட்டத்தில் 142 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, இம்மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இந்நிலையில், கேரளத்தில் 47 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக நேற்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், பாஜக அதன் ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பல முக்கியத் தலைவர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது.
அதன்படி, கேரள மாநிலக் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், நேமம் தொகுதியில் போட்டியிட உள்ளார். இத்தொகுதியில் பாஜக மற்றும் சிபிஐஎம் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்து, முன்னாள் மத்திய அமைச்சர் வி. முரளீதரன் கஜக்கோட்டம் தொகுதியிலும் பாஜக தலைவர் கே.சுரேந்திரன் மஞ்சேஷ்வரிலும், ஷோபா சுரேந்திரன் பாலக்காட்டிலும், வட்டியூர்காவு தொகுதியில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர். ஸ்ரீலேகாவும் போட்டியிடுகின்றனர்.
கேரள மாநில முன்னாள் முதல்வர் கே.கருணாகரனின் மகளும் காங்கிரஸ் தலைவர் கே.முரளீதரனின் சகோதரியுமான பத்மஜா வேணுகோபால், திருச்சூர் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
இது தவிர, 2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து வயநாட்டில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் கோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
கேரளத்தில் காங்கிரஸ், சிபிஐஎம் மற்றும் பாஜக ஆகிய 3 கட்சிகளிடையே கடுமையான மும்முனைப் போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது.


