தமிழ்நாட்டில் போலவே அசாம் மாநிலத்தின் சட்டப்பேரவை பதவிக்காலமும் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது.
இதனையொட்டி, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான குழு அசாம் சென்று தேர்தல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக அரசு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
அதன் பின்னர், தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரி மற்றும் கேரளாவில் போன்று அசாம் மாநிலத்திலும் ஏப். 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அசாம் மாநிலத்தின் தேர்தல் களத்தில் இன்னும் விறுவிறுப்பு கூடி விட்டது. இம்மாநிலத்தில் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னதாகவே, காங்கிரஸ் 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
முதல் பட்டியலில் 42 பேரும், 2வது பட்டியலில் 23 வேட்பாளர்களும் உள்ளனர். பூபன்போரா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் ஏற்கனவே காங்கிரசில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்த நிலையில் வேட்பாளர் பட்டியலில் இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் அதிகளவில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அசாம் மாநில காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகாய் கூறிய போது, வேட்பாளர் பட்டியலில் அதிருப்தியால் மூத்த தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளதாக வரும் செய்தி வதந்தி. எந்தவொரு மூத்த காங்கிரஸ் தலைவரிடமிருந்தும் கட்சிக்கு ராஜினாமா கடிதம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் கட்சிக்குள் எந்த வேறுபாடும் இல்லை எனவும் உண்மையில், வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னரே மக்களிடையே உற்சாகம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில், இறுதிப் பட்டியல் குறித்து ஆலோசித்து வருவதாகவும் இம்முறை அசாமில் பாஜக ஆட்சி வீழ்த்தப்பட்டு, காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதி எனவும் விரைவில் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என்றும் கூறினார்.


