நடிகர் விஜய் தவெக கட்சியைத் தொடங்கி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்து போட்டியிடத் தயாராகி வருகிறார்.
முன்னதாக, திமுக தலைமையிலான மத சார்பற்ற ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவுக்கும் இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் இழுபறி நிலை நீடித்து வந்தது.
அப்போது, கூடுதல் தொகுதி, ஆட்சியில் அதிகாரம், உள்ளாட்சிகளில் பதவி தராவிட்டால், தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் முனைப்பு காட்டியது.
இதன் ஒருபகுதியாக, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுலுக்கு நெருக்கமான பிரவீன் சக்ரவர்த்தி, தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் ஆகியோர் தவெகவுடன் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. இது திமுக தலைமையை எரிச்சலடையச் செய்தது.
இதனிடையே, சோனியா காந்தி, காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் அறிவுறுத்தலின்படி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசிய பின்னர் தொகுதி பங்கீடு முடிவானது.
இதனால், காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணிக்கு வரும் என்று மிகவும் எதிர்பார்த்து ஏமாந்த அக்கட்சியின் தலைவர் விஜய் தனித்து போட்டியிடும் முடிவை எடுத்தார். ஆனால், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக விஜயை தங்களது கூட்டணிக்கு கொண்டு வர தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
தமிழ்நாட்டில் எப்படியும் தோற்றுவிடுவோம் என்ற நிலை பாஜகவுக்கு ஏற்பட்டிருப்பதால் விஜயை கூட்டணி கொண்டு வரும் முயற்சியாக ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் இபிஎஸ், நயினார் நாகேந்திரன், தவெகவுடன் கூட்டணி குறித்து பேசவில்லை என எப்போதுமே மறுத்து வருகின்றனர். ஆனால், கரூர் துயர சம்பவத்தில் சிபிஐ விசாரணை வளையம், ஜன நாயகன் சென்சார் விவகாரம் ஆகியவற்றை கையிலெடுத்துள்ள பாஜக விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பகீரத முயற்சி மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், என்டிஏ கூட்டணியில் இணைய தவெக தரப்பில் குறைந்தது 80 தொகுதிகளை கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எதற்கும் மசியாத என்டிஏ, 55 தொகுதிகள், துணை முதல்வர் பதவி கொடுக்க முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.
அதே நேரம், விஜய் கோரிக்கையை என்டிஏ ஏற்றுக் கொண்டால் அதிமுகவுக்கு 100 அல்லது 110 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் அதிமுக தலைமை அதிருப்தியில் இருப்பதாகவும், என்டிஏ கூட்டணிக்கு விஜய் வரும் பட்சத்தில் அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க இபிஎஸ் தயங்குதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


