தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிங்களுக்கான சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதால், இம்மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரியில் ஏப்.9ம் தேதியும் தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, வரும் மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையொட்டி, இம்மாநிலங்களின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன.
அதே போல், தமிழ்நாடு, புதுச்சேரியில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து கடந்த மாதம் விருப்ப மனு பெறப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் அக்கட்சித் தலைவர் விஜய் கடந்த வாரம் நேர்காணல் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து புதுச்சேரியில் தவெக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் திங்கட்கிழமையன்று நேர்காணல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, விருப்ப மனு அளித்த 50க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்நிலையில், விருப்பமனு அளித்தவர்கள் அனைவரும் இன்று காலை முதலே பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். தங்களிடம் விஜய் நேர்காணல் நடத்துவார் என்று அவர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் உட்பட மாநில நிர்வாகிகள் மட்டும் நேர்காணல் நடத்தியுள்ளனர்.
இதனால், நேர்காணலுக்கு வந்த புதுச்சேரி நிர்வாகிகள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.


