தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிங்களுக்கான சட்டப்பேரவை பதவிகாலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதால், இம்மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதன்படி, புதுச்சேரியில் ஏப்.9ம் தேதியும் தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு, வரும் மே 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனையொட்டி, இம்மாநிலங்களின் முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக, காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகின்றன.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸும் பாஜகவும் கூட்டணி அமைத்துள்ளன. இதில், என்.ஆர். காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
இதைத் தொடர்ந்து, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து இறுதி செய்வதற்காக அங்குள்ள தனியார் விடுதியில் முதல்வர் ரங்கசாமியை சந்திக்க பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியா நேற்றிரவு காத்திருந்தார்.
ஆனால், முதல்வர் ரங்கசாமி அங்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக மாண்டவியா உடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையிலான ஐவர் குழு, என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் தொடர வேண்டுமானால் லட்சிய ஜனநாயகக் கட்சியைக் கூட்டணிக்குள் சேர்க்கக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் ஆகியோருடன் மன்சுக் மாண்டவியா ஏறக்குறைய ஒரு மணிநேரம் ஆலோசனை நடத்தினார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் கூட்டணியை உறுதி செய்த நிலையில், என்.ஆர். காங்கிரசின் நிபந்தனை கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முதல்வர் ரங்கசாமியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொலைபேசியில் தொடர்பு கொள்ள இருப்பதாகவும், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் தவெகவுடன் கூட்டணி அமைக்க என்.ஆர். காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் தகவல் வெளியாகி உள்ளது.


