தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவை பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தலுக்கான தேதியை தலைமைத் தேர்தல் ஆணையர் நேற்று முன்தினம் அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதியும் புதுச்சேரியில் ஏப்.9ம் தேதியும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.
திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு கடந்த பிப்.20ம் தேதி முதல் மார்ச் 6ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 15 ஆயிரத்து 372 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
இந்நிலையில், திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேர்காணல் நடத்துகிறார். இந்த வேட்பாளர் நேர்காணல் வரும் 22ம் தேதி வரை நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது.
நாளை மார்ச் 18ம் தேதி காலை 9 மணிக்கு தூத்துக்குடி திருநெல்வேலி, கன்னியாகுமரி தென்காசி மாவட்டங்களுக்கும், மதியம் மதுரை, தேனி, விருதநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கும் , நாளை மறுநாள் மார்ச் 19ம் தேதி காலை கரூர், நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும், அன்று மாலை திருப்பூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் நேர்காணல் நடைபெறவுள்ளது.
இதைத் தொடர்ந்து மார்ச் 20ம் தேதி காலை ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அன்று மாலை தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கும் நேர்காணல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


